சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

அனுபவங்கள்

கவிதைகள்

செங்கோட்டை ஸ்ரீராம் முகநூல்

கட்டுரைகள்

உங்களோடு ஒரு வார்த்தை

This is default featured slide 1 title

Easy to customize it, from your blogger dashboard, not needed to know the codes etc.

This is default featured slide 2 title

Easy to customize it, from your blogger dashboard, not needed to know the codes etc.

This is default featured slide 3 title

Easy to customize it, from your blogger dashboard, not needed to know the codes etc.

This is default featured slide 4 title

Easy to customize it, from your blogger dashboard, not needed to know the codes etc.

This is default featured slide 5 title

Easy to customize it, from your blogger dashboard, not needed to know the codes etc.

ஞாயிறு, டிசம்பர் 09, 2018

அக்னிக் குஞ்சுகளே அணி திரள்வீர்.....!!



 அக்னிக் குஞ்சுகளே அணி திரள்வீர்.....!!

ஆசிரியர் அழைக்கின்றார் அணி சேர்வீர்!!!

84 வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள தினமணிக்கு ஏராளமான பெருமைகள்  இருந்தாலும், மகாகவி பாரதியையும், தினமணியையும் வேறுபடுத்தி பார்க்க முடியாது. பாரதி நினைவு நாளான செப்டம்பர் 11-ம் தேதிதான் தினமணியும் உதயமானது. 

நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் என்ற பாரதியின் மேற்கோளை அடிநாதமாக கொண்டு தொடங்கப்பட்டு அதன் வழியில் பீடு நடை போட்டு வரும் தேசிய பார்வை கொண்ட நாளிதழ்தான் தினமணி.

பாரதியின் பாடல்களையும், அவரது சிந்தனைகளையும் உணராதவர்கள், அவரது தாக்கம் இல்லாதவர்கள் பத்திரிக்கையாளர்களாகவே இருக்க முடியாது என்பது எனது சொந்தக் கருத்து.

பாரதியின் சொல்லாட்சியில் மிக முக்கியமானதும், இன்றைய கால கட்டத்தில் அனைவருக்கும் தேவையானதுமான கோபம் எனப்படும் 

ரெளத்திரம் பழகு என்ற ஆத்திசூடி வைர வரிகளாகும்.

நாட்டில் நடக்கும் தீமைகளை எதிர்த்து குரல் கொடுக்காமல் முடங்கிப் போயிருந்த சமூகத்தில் பாரதி, தீக்குச்சி போல பற்ற வைத்தான் விடுதலை எனும் நெருப்பை. அவன் வழியில் இன்றும் தினமணி பாசறையில் ஏராளமான பாரதிகள் தோன்றி அக்னிக் குஞ்சுகளாக வலம் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

அவரது பிறந்த நாளை (டிசம்பர் 11) இன்றும் ஏராளமான அமைப்புகள் கொண்டாடி வந்தாலும், அதற்கும் ஈடாக தினமணியும் அவனது புகழைப் பாட துணிந்துவிட்டதை எண்ணி பெருமைப்படுகிறோம்.

எங்களது தினமணி ஆசிரியர் திருமிகு. கி. வைத்தியநாதன் அவர்களுக்கு எண்ணற்ற சாதனைகள் இருந்தாலும் அவரது காலத்தில், அவரது ஏற்பாட்டில் பாரதிக்கு பிறந்த நாள் கொண்டாட்டம், அதுவும் அவர் பிறந்த எட்டையபுரத்தில் வரும் 11-ம் தேதி நடத்தவிருப்பது தினமணிக்கு மேலும் புகழை சேர்க்கும். இது நல்ல தொடக்கம். 

பாரதியின் பேரில் ரூ. 1 லட்சம் பொற்கிழியும், அவரது பெயரில் விருது வழங்கும் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது.

தினமணியில் திரு. கி.வைத்தியநாதன் ஆசிரியராகப் பொறுப்பேற்ற பிறகு, இடையில் நின்றுவிட்ட தமிழ்மணி எனும் பகுதியை பட்டைத்தீட்டி புத்தொளி பெறச் செய்தார் அவர். பெற்ற தாயைக் கொல்வது போல, தமிழை தினமும் கொன்று கொண்டிருக்கும் தினப் பத்திரிகைகளுக்கு மத்தியில் தமிழுக்கென்று தனிப் பக்கத்தை உருவாக்கி ஞாயிறுதோறும் தமிழை பீடமேற்றி வைத்தவர் ஆசிரியர் அவர்கள். 

தமிழ்மணியை தமிழ் கூறும் நல்உலகிற்கு வழங்கிய நிகழ்வுகளுக்கு அடுத்து சிகரம் வைத்தார் போன்று மற்றொரு சாதனை நிகழ்வு இந்த பாரதி விருது வழங்கும் விழா. இது ஆண்டுதோறும் நடத்தப்பட வேண்டும். சாதனை புரியும் இளம் பத்திரிக்கையாளர்களுக்கும் எதிர்காலத்தில் இந்த விருது வழங்கப்பட வேண்டும். அதையும் எமது ஆசிரியர் செய்வார் எனக் கருதுகிறோம்.

எமது வாசகர்கள், பாரதியிடம் காதல் கொண்ட  இதழாளர்கள், அன்புள்ளங்கள் அனைவரும் மறவாமல் எட்டையபுரத்திற்கு வர வேண்டும்.

ஊர்க் கூடி தேர் இழுப்போம் வா..வா.....!

ஊரெல்லாம் பாரதி புகழை ஏந்திச் செல்வோம் வா..வா...!!

பின்குறிப்பு:  ஶ்ரீவைத்யநாதாய வித்மஹே தமிழ்மணியாய தீமஹி தந்நோ தினமணி பிரசோதயாத் 

என்றெல்லாம் எமக்கு மேற்கண்டதுபோல் சரணாகதி செய்யத் தெரியவில்லை. தெரிந்திருந்தால் திருநெல்வேலி டிரான்ஸ்பர் ஆவது கிடைத்திருக்கும்... 

வாழ்க வளமுடன்

வியாழன், பிப்ரவரி 16, 2017

தினமணி ஆசிரியருக்கு எழுதிய கடிதம்..!

அதீத அன்புள்ளம் கொண்ட
தினமணி ஆசிரியராக இருந்துவரும்
திரு.வைத்தியநாதருக்கு,

வணக்கம்.

இரண்டு வருட இடைவெளியில் மீண்டும் ஒரு கடிதம் எழுதுகிறேன்...

இத்தனை நாட்களாய் தங்களை மறந்துவிட்டதற்காக மன்னிக்கவும்.

தங்கள் டிவிட் ஒன்று, ஓ மன்னிக்கவும்! தங்களுக்கு சுட்டுரை என்றால்தான் பிடிக்கும் இல்லையா? தங்களுக்குத்தான் ’தமிழ்மணி’யின் மீது தீராக் காதல் அல்லவா! அப்படியான தங்களின் சுட்டுரை ஒன்று மாலையில் என் கவனத்துக்கு வந்தது. ரசித்தேன்! உடனே கடிதம் எழுதத் தோன்றிவிட்டது! 

//”எனது தலையங்கத்தைப் படிக்க ஆவலாய்க் காத்திருந்தவர்களுக்கு ஒரு வார்த்தை. நான் நானாக இருக்கிறேன். இருப்பேன்.”// என்று தாங்கள் குறிப்பிட்டதைப் பார்த்து புளகாங்கிதம் அடைந்தேன். 

தொடர்ந்து அதே சுட்டுரையின் தொடர்ச்சியாய் ஒருவர் கேட்ட கேள்விக்கு தாங்கள் அளித்த பதிலைக் கண்டு மயங்கிப் போனேன்...

// சார், அதிமுக பொதுச்செயலராக சசிகலா நியமிக்கப்பட்டதில் இருந்து நேற்று வரை தமிழக அரசியலை பற்றிய தலையங்கம் உங்களுக்கு திருப்தியா// என்ற வாசகர் ஒருவர் கேள்விக்கு 
// @rajeshksy நிச்சயமாக. சரி என்று படுவதைப் பதிவு செய்கிறேன்.அரசமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொள்பவர்கள் சில கசப்பையும் சகித்துக் கொண்டாக வேண்டும்// என்று பதிலளித்திருக்கிறீர்கள்! 

மிக்க மகிழ்ச்சி. மெத்த சந்தோஷம்!

குறுகிய காலத்தில் தாங்கள் இவ்வளவு தூரம் நவீனத் தொழில்நுட்ப ரீதியாக சமூக வலைத்தளங்களில் உலா வருவது மகிழ்ச்சியைத் தருகிறது. கைப்பிடித்து அட்சரப்யாஸம் கொடுத்த தகப்பனும் தாய்க்கும் இருக்கும் மகிழ்ச்சி அது! 

சமூக வலைத்தளங்களில் ஆர்வம் இல்லாமல் இருந்த தங்களுக்கென, டிவிட்டர், பேஸ்புக் கணக்குகளை நானே உருவாக்கி, அவற்றைப் பயன்படுத்தும் முறையை சொல்லிக் கொடுத்து சுவை ஏற்படுத்தியவன் என்ற வகையில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி! 

உங்களுடன் எத்தனையோ இடங்களுக்கு உடன் வந்திருக்கிறேன். அப்போதெல்லாம், ”சீராமுக்கு எங்க போனாலும் ஒரு பிளக்பாயிண்ட் இருந்தா போதும்.. அவன் பாட்டுக்கு லேப்டாப்பை எடுத்துண்டு வேலை செய்வான்; வேற எதப் பத்தியும் அவனுக்கு கவலை கிடையாது” என்று சொல்வீர்கள். அப்படியாக என் தொழில்நுட்ப ஆர்வத்தைப் பாராட்டி, எனக்கு ஒரு ’சாம்சங்க் டேப்’ பரிசளித்தீர்கள். எவரிடமும் எந்தப் பொருளோ பணமோ கைநீட்டி வாங்கியிராத நான், உங்கள் நட்புமுறை பரிசளிப்புக்கு மகிழ்ந்தேன். ஆனால், எப்போது அந்த நட்புமுறை உடைந்ததோ, அப்போதே அதையும் உடைத்துவிட்டேன் என்பதை இங்கே பதியவைக்கிறேன்.

நிற்க...

அண்மைக்கால தமிழக அரசியல் சூழலில் தாங்கள் எழுதும் தலையங்கம், தங்களின் ஆசிரியர் குழு போடும் முதல்பக்க கட்டுரை, உள்பக்க லீட், ஆப் எட் லீட் ஆகியவற்றை கவனித்து வரும்போது, தங்களுக்கு கருத்து சொல்ல வேண்டும் என்று தோன்றும். ஆனால் தன்மானம் தடுத்து, மனம் அப்படியே நின்று விடும்! நான் தினமணியின் இணையதளப் பொறுப்பில் இருந்த வரை, பல நாட்களில் தங்கள் தலையங்கக் கருத்துகளை விமர்சித்திருக்கிறேன். சிலவற்றில் பாராட்டும்படியான அம்சம் இருக்கும். சிலவற்றில் தவிர்க்கும்படியான தடுமாறல்கள் இருக்கும். எல்லாவற்றையும் உரிமையோடு விமர்சித்திருக்கிறேன். நீங்களும் பல முறை அவற்றைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்!  காரணம், தலையங்கம் எப்போதும் தாங்கள் எழுதுவதில்லை! நாமக்கல்லில் தாங்கள் ஒரு லட்ச ரூபாய் பொற்கிழிப் பரிசு பெற்ற கூட்டத்தில் சுட்டிக்காட்டினீர்கள் நினைவிருக்கலாம்... ”தலையங்கத்துக்குப் பொருத்தமான திருக்குறளைத் தேர்ந்தெடுத்துத் தரும் திருச்சி செய்தி ஆசிரியர் சோமு” என்று! அந்த சோமுவும், குருசாமியும் இன்னும் லோக்கல் தாதாக்களும் எழுதாமல் போகும் நாட்களில் தாங்கள் எழுதி வரும் தலையங்கத்தையும் ஒப்பிட்டு, உங்கள் எழுத்து நடை, வாக்கிய அமைப்பு, கையாளும் வார்த்தைகளைச் சொல்லி எப்படி தனித்துத் தெரிகிறது என்று சுட்டிக் காட்டுவேன். என்ன இருந்தாலும் கருத்து நாந்தானே அவர்களுக்குச் சொல்லி அதைத் திருத்துகிறேன் என்பீர்கள்! இப்போது அவற்றில் தடுமாற்றங்களைக் காணும்போது.... சரி.. அது கிடக்கட்டும்! அது உங்கள் உள் விவகாரம்!  

இப்போது, தாங்கள் திருவாளர் சோமுவைக் கழட்டி விட்டதாலும், வேறு எவரும் தங்களுக்குத் தோதாகப் படவில்லை என்பதாலும், தலையங்கத்தை மிக முயன்று தாங்களே எழுதுகிறீர்கள் என்பது தெரிகிறது. நான் முன்பே சொன்னதுபோல், தங்களின் எழுத்து நடை அங்கங்கே பல்லைக் காட்டிச் சிரித்துக் கவர்கிறது! அந்தக் கவர்ச்சிகரமான உந்துதலிலேயே தலையங்கத்தைப் படிக்க ஆவலாக இருப்பதாக நான் நேற்று எழுதியிருந்தேன்! எதை எல்லாம் நாங்கள் சகிக்கல என்று யோசிக்கிறோமோ அதெல்லாம் தங்களுக்கு சிறந்த சகிப்புத்தன்மையைக் காட்டி, சசிகலா என்று சஹஸ்ரநாம அர்ச்சனையை செய்யத் தூண்டிவிட்டிருக்கிறது. 

இதே டிவிட்டில் ஒருவர் கேள்வி கேட்கிறார்... நானும் வெகு நாட்களாய் கேட்டுக் கொண்டிருந்ததுதான்... 

@KVaidiyanathan சார், மதி அவர்களின் கார்ட்டூன் கடந்த 2 மாதமாக வருவதில்லையே என்ன காரணம்..?

@rajeshksy அவர் விடுப்பில் இருக்கிறார். அலுவலகம் வருவதில்லை
என்பது உங்கள் பதில். அவர் விடுப்பில் இருக்கிறார் என்பது, வாசகருக்குச் சொல்வதற்குப் போதுமான தகவல்! ஆனால், அடுத்த, அலுவலகம் வருவதில்லை என்று கூறும் பதில், ஏன் வருவதில்லை, என்ன காரணம் அவர் வராமலிருக்க என்றெல்லாம் பின்னணியின் அலசலை தானாக ஏற்படுத்தி, எங்களைச் சிந்திக்க வைத்துள்ளது. 
தாங்களும் சசிகலா போல்தான் இந்த வாக்கியத்தைக் கையாண்டிருக்கிறீர்கள். தங்கள் உள்மனசை வெளிக்காட்டியபடி! 
சரி கிடக்கட்டும்.. இது உங்கள் உள்நாட்டுக் குழப்பம், கம்பெனி உள்விவகாரம்! 

ஆனால் தாங்கள் டிவிட்டினீர்கள் ஒரு டிவிட்...! 
”எனது தலையங்கத்தைப் படிக்க ஆவலாய்க் காத்திருந்தவர்களுக்கு ஒரு வார்த்தை. நான் நானாக இருக்கிறேன். இருப்பேன்.”// என்று...

இதுதான் என்னை இக்கடிதத்தை எழுதத் தூண்டிவிட்டுள்ளது. 

ஐயா... உங்கள் வார்த்தையில் சொல்லப்போனால்... நான் நானாக இருக்கிறேன், இருப்பேன்! என்று சசிகலா அம்மையார் ஜெயலலிதா சமாதியில் வைத்து சபதமிட்டதைப் போல் அதிபயங்கர சபதமாகத் தெரிகிறது உங்கள் சபதம்!  

ஒரு விஷயம் என்ன என்றால்...

நான் தங்களுடன் ஒரே அலுவலகத்தில் பணியில் இருந்த அந்த நாலரை வருடங்களும்... நீங்கள் நீங்களாக இருக்கக் கூடாது என்றுதானே அவ்வளவு தூரம் முயற்சி செய்தேன். உங்களை உங்கள் இயல்பில் இருந்து வெளியில் கொண்டுவந்து, நீங்கள் தினமணி ஆசிரியராக இருக்க வேண்டும், தினமணி ஆசிரியர் பொறுப்புக்கு ஏற்ப உங்களைத் தகவமைக்க வேண்டும் என்றுதானே முயன்றோம்... 

ஏனென்றால், 
தினமணியின் வரலாறையும் அதன் ஆசிரியர்களின் வரலாறையும் படித்து, ஊர்ப் பாசத்தாலும் ஜில்லா பாசத்தாலும், தேசியமும் தமிழும் விதைவிட்டுக் கிளைத்த நெல்லை மண்ணில் இருந்து வந்து நாட்டு நலனில் அக்கறை கொண்ட ஒருவனாக அணுகியதாலும்... குறிப்பாக தாங்களும் அதே நெல்லை மண்ணில் கல்லூரிக் காலத்தைக் கழித்தவர்; என் ஆசிரியர் உங்களுக்கும் கல்லூரி ஆசிரியர், என் நட்பு வட்டம் உங்களின் நட்பு வட்டத்தில் ஒரு பகுதி என்றெல்லாம் இருந்த காரணத்தால் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் பாசம் வைத்துப் பழகியதன் வெளிப்பாடுதான்... தங்கள் கௌரவத்தின் மீதான, தங்கள் வளர்ச்சியின் மீதான அக்கறையாக அன்று இருந்தது. ஏற்பவோ ஏற்ப இல்லாமலோ தாங்கள் தினமணியின் ஆசிரியர் பொறுப்புக்கு வந்துவிட்டீர்கள்; தினமணியின் வரலாற்றில் தங்கள் இடம்பெறப் போகிறீர்கள் என்ற எச்சரிக்கை உணர்வையே தங்களுக்கு அவ்வப்போது பதிய வைத்துக் கொண்டிருந்தோம். ஆனால், உங்கள் உள்மனத்தின் உந்துதலை அறியத் தவறிவிட்டோம்! 

நீங்கள் அடிக்கடி சொல்வீர்கள்... முட்டாள்கள்தான் இங்கே வேலை செய்வான்; தினமணியை விட்டுச் செல்பவன் நல்ல அறிவுஜீவியாக இருப்பான் என்று!

அதை குறுகிய காலத்தில் உணர்ந்தேன்.

எத்தனை பேர் அப்படி! 
தினமணிக் கதிரில் சிவக்குமார் வேலை செய்தார். தங்கள் வாக்கை மெய்ப்பிக்க, அவர் பணி ஓய்வு பெறும் வயதில் திருச்சிக்குத் திசைதிருப்பினீர்கள். சிரமப்பட்டு அவர் போதுமென்று வந்துவிட்டார்.
தங்கள் அறிவுஜீவிப் பட்டத்தைச் சுமக்காமலே சினிமா எக்ஸ்பிரஸ் சிவகுமார்... ( தங்கள் ஜெயலலிதா பாணி தண்டனையைப் பார்க்காமலே மறைந்தது மகிழ்ச்சி என்ற வாசகத்தின்படி) பாவம் மறைந்துபோனார்.

இந்தப் பட்டியலில் எத்தனையோ பேர். அனைவரின் பெயரையும் பட்டியலிடுவது பொதுவெளியில் தகாது என்பதால் உங்கள் வாக்கியத்தின் படி ஓர் அறிவுஜீவியாக இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.

ஓர் இலக்கிய மாத இதழ், தங்கள் முகப்பில் “இதழல்ல இயக்கம்” என்று போட்டுக் கொண்டிருக்கும். 

ஆனால், அதை அழகாக செயல்படுத்தி வருபவர் தாங்களே.
தினமணியை இதழாக இல்லாமல் ஒரு அரசியல் இயக்கமாகவே நடத்தி வருவதை, உலகம் அறியும். அதைத்தான் இப்போது நான் வேடிக்கையாகக் குறிப்பிடுகிறேன்... தினமணி பின்னேற்றக் கழகம் என்று! - அதன் தலைவர் தாங்கள்! ஒவ்வொரு பதிப்பும் ஒரு மண்டலம். அதற்குள் மாவட்டம். வட்டம். அதன் நிருபர்கள், செய்தியாளர்கள் அந்த அந்த மாவட்ட,வட்ட செயலர்கள். உள்ளே செ.ஆ., பொ.ஆ., உ.ஆ., தலைமை செய்தியாளர்கள், எல்லோருக்கும் ஒரு பொறுப்பு. தலைவரின் சுற்றுப்பயணம், கூட்டங்கள் குறித்த விவரங்கள் தினமணியில் முன்னதாகவே பிரசுரிக்கப்பட்டு தெரிவிக்கப்பட்டுவிடும். 

அங்கங்கே, தலைவர் பயணம் செய்யும் ரயில் வரும் போது, ரயில் நிலையங்களில் வட்டச் செயலர் தலைவருக்குப் பிடித்த உணவு, இனிப்பு, இட்லி சாம்பார் பாக்கெட்டுகளுடன் காத்திருந்து கையசைப்பார். எவர் தீவிர விசுவாசியோ, அவருக்கு வருடாந்திர கவனிப்பு நன்றாக இருக்கும். 

இப்படியாக ஓர் அரசியல் கட்சியில் இருந்து எதைப் பார்க்க வேண்டுமோ அதை, அரசியல் கட்சிகள் என்றாலே அடியோடு வெறுக்கும் நான் குறுகிய காலத்தில் தி.பி.க.,வில் இருந்து கற்றுக் கொண்டுவிட்டேன். அதற்காக நன்றி. இனி நானும் அரசியலில் ஈடுபடலாம். 

எப்படி நம்மை நாமே முன்னிறுத்திக் கொள்வது, எப்படி ஒரு கட்சியைக் கையாள்வது, எப்படி போட்டுக் கொடுத்து இடத்துக்குத் துண்டு போடுபவர்களின் பேச்சைக் கேட்டு அரவணைப்பது, போட்டுக் கொடுக்கப் பட்டவர்களின் சீட்டைக் கிழிப்பது எல்லாம் உடனிருந்து கற்றுக் கொண்டுவிட்டேன். எல்லாம் அனுபவம். அந்த அனுபவத்தைப் படிக்க வைத்த தங்களுக்கு என்றென்றும் நன்றிக் கடன் பட்டுள்ளேன்.  

இத்தகைய பின்னணியில் நீங்கள் எழுதிய தலையங்கத்தை விமர்சிக்க விழைகிறேன். ஏனெனில் தங்களுடன் தொடர்பு விட்டுப் போய் இரண்டு வருடங்கள் ஆகிவிட்டதாலும், தங்களிடம் நேரில் சொல்ல முடியாது என்பதாலும், அப்படியே சொல்பவர்களின் பேச்சையே தட்டிக் கழிக்கும் தாங்கள் என் பேச்சையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்று என் உள்மனம் சொல்வதாலும் இதனை இங்கே பதிவு செய்கிறேன்.
 நிற்க...

தங்கள் 15.2.2017ம் தேதியிட்ட தலையங்கத்தில்...

//மது கோடாவும், ஓம் பிரகாஷ் செளதாலாவும் ஊழல் வழக்கிலும், ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கிலும் தண்டனை பெற்றிருக்கிறார்கள் என்பது மட்டுமே வித்தியாசம்.// 
ஆஹா... ஊழல் செய்யாமல் சொத்துக் குவிப்பது எப்படி என்பதையும், ஊழலுக்கும் சொத்துக் குவிப்புக்கும் என்ன வித்யாசம் என்பதையும் வாசகர்களுக்கு அக்குவேறு ஆணிவேறாகச் சொல்லிவிட்டால், நானும் தங்களை உயர்ந்த ஆசிரியராகக் கொண்டு கற்றுக் கொள்கிறேன். காசு இல்லாம ரொம்ப கஷ்டப் படுறேனுங்க ஸாமீ. 

//"...ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் இப்போது நிலமை எப்படி இருக்கும் என்பதை நினைத்தால் சற்று வேதனையாகத்தான் இருக்கிறது. இப்படி ஒரு அவமானத்தை எதிர் கொள்ளாமல் அவர் மறைந்தது கூட நல்லதுதான் என்று கூறத் தோன்றுகிறது..."//

// "யாராக இருந்தாலும் சட்டத்தின் முன்பு  நிறுத்தி தண்டிக்கப்படுவர் என்பதை இந்தத் தீர்ப்பு உறுதி படுத்தியிருக்கிறது"//

என்ன சொல்ல வருகிறீர்கள்? 

தீர்ப்பும், தண்டனையும் வரவேற்கத்தக்கது. ஆனால் அதை ஜெயலலிதா அனுபவிக்காதது நல்லது... 
என்ன நியாயமோ? புரியவில்லை!

2014ல் இதே கர்நாடக நீதிமன்றம் அப்படி ஒரு தீர்ப்பு அளித்த போது வராத அவமானம், இப்போது வந்துவிடுமா? எந்த மாநிலத்துடன் காவிரிப் பிரச்னைக்காக சண்டை போட்டு மல்லுக்கட்டினாரோ அந்த மாநிலத்தில் கேவலப்பட்டு, அந்த மாநில மக்களால் சிரிப்பாய்ச் சிரித்து, ஒட்டு மொத்த தமிழகத்தையே கேலி பேசும் விதமாக நின்றபோது வராத அவமானம் இப்போது வந்துவிடப் போகிறதா?

ஜெயலலிதா மறைந்த போது (டிச.6,2016) முதல் பக்க சிறப்பு தலையங்கத்தில்,

"இனி ஜெயலலிதா ஓர் அசைக்க முடியாத சக்தி என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருந்த வேளையில் இடியென தாக்கியது பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்குத் தீர்ப்பு.

நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பும், அதைத் தொடர்ந்த அவரின் சிறைவாசமும் அவரை நிலை குலைய வைத்துவிட்டன. அந்த அதிரடி தாக்குதலிலிருந்து ஜெயலலிதா மனதளவில் மீளவே இல்லை.
 அவரது உடல்நிலை இந்த அளவுக்கு பாதிக்கப்பட்டு இப்போது மரணத்தை தழுவி இருப்பதற்கு குன்ஹா வழங்கிய தீர்ப்புத்தான் காரணம் என்று சரித்திரம் பதிவு செய்தால் வியப்பதற்கில்லை...." 
  
- என்று ஜெயலலிதா மரணத்துக்கு குன்ஹாவைக் காரணம் காட்டுகிறீர்கள். நீதிபதி அல்ல;  ஜெயலலிதா அன்கோ செய்த தவறுகள் தான் காரணம் என்று சொல்லத் தோன்றாத நடுநிலையைத் தாங்கள் கொண்டிருப்பது மெத்த மகிழ்ச்சி தருகிறது. 

நிற்க...

ஜெயலலிதா மறைந்த போது மிக பதட்டமான சூழல் இருந்தது. பிரச்னை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டபோது, கட்சியினர்கூட அமைதியாக  இருந்து அந்த நேரத்தை எதிர்கொண்டனர். ஆனால் அப்போது இந்தச் சூழலை குன்ஹாவுக்கு எதிராகத் திருப்பிவிட்டு, சசிகலா மீது பொதுமக்களுக்கு எழுந்த சந்தேகத்தை திசை திருப்பி விட்ட அற்ப சந்தோஷத்தை தாங்கள் அடைந்திருப்பீர்கள். 
ஆனால் இன்று குன்ஹா, உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதலால், நேர்மையாளர் என வரலாற்றில் இடம் பெற்றுவிட்டார். கோடிகளுக்கு விலைபோகிறவர்கள் கேடிகளாவர் என்பதை நிலைநிறுத்தும் வண்ணம் குமாரசாமி கேலிக்கு ஆளாகிவிட்டார். 

தலையங்கத்தின் கடைசிப் பகுதியில் தாங்கள் ஒரு அதிமுக., கட்சி நாளேட்டின் தகுதி வாய்ந்த  ஆசிரியர் என்பதை நிரூபித்து விட்டீர்கள். கட்சி உடைந்துவிடக் கூடாது என்பதில் கவனம் தெரிகிறது. அதற்காக நீங்கள் சொல்லும் வழிமுறைகள், திரு.எம்.நடராஜனாரை சந்தித்து அடிக்கடி பேசுவதில் இருந்து வெளிப்படுகிறது. ஏன்.. உங்கள் சிந்தனை இப்படிப் போகாதா?
பன்னீர்செல்வமும் சசிகலா காலில் விழுந்து கும்பிடு போட்டவர்தான். அவரை முதல்வராக நீடிக்க வைத்து, தாங்கள் கட்சிப் பொறுப்புகளில் இருந்து தங்கள் அராஜக/பிறர் சொத்தை, அரசாங்க சொத்தை கபளீகரம் செய்யும் காரியத்தை நிறைவேற்றிக் கொள்ள முயலட்டுமே என்று! அப்படி எனில் கட்சி உடையும் நிலை வராது இல்லையா?

எப்படிப் பார்த்தாலும் தாங்கள் தமிழக மக்களுக்கு துர்நலனை நாடும் துர்போதனையைச் செய்கிறீர்கள் என்பதை எப்போது உணரப் போகிறீர்கள்!

ஒருவேளை தாங்களே நேரடியாக பாதிக்கப்பட்டால் பொங்கி எழுவீர்கள் போலும்! 

ஆளுநரை குறை சொல்லும் நீங்கள், ஆளுநரின் செயல், மோடி, குருமூர்த்தி உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ். கும்பலின் சதி என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். தாங்கள் திருவாளர் தி.க. வீரமணியின் கருத்தைச் சொல்லி, திருவாளர் எம்.என்.னின் கைக்கூலி ஆகிவிட்டீர்கள் என்று பேசிக்கொள்கிறார்களே! அதை எப்படித் துடைப்பீர்கள்! தேவையில்லைதான்... உண்மை அதுவாகவே இருக்கும்போது!

ஆனால் இப்போது ஒன்று சொல்லத் தொடங்கியிருக்கிறீர்கள். எல்லாம் முதலாளியின் கட்டளை என்று! அமரர் கோயங்கா தொடங்கி, இன்று வரையுள்ள முதலாளியைப் பற்றி நன்கு தெரிந்தவர்கள் தெளிவாகக் கூறுவார்கள்... தினமணியின் ஆசிரியர் குழுவுக்கு இருக்கும் கௌரவமே சுதந்திரம்தான்! முதலாளியுடன் பழகி அறிந்தவன் என்ற வகையில், அவர் ஒன்றே ஒன்று சொல்வார்... எல்லா முதலாளிகளும் சிந்திக்கக்  கூடியதுதான்.. இத்தனை பேருக்கு சம்பளம் கொடுக்க வேண்டும். பாதகமில்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்பது மட்டுமே! அது நம் தார்மீக கடமையும்கூட! இந்த ஓர் இதழின் இயக்கத்தில்தான் எத்தனை பேரின் வாழ்வாதாரம் இருக்கிறது!?
ஆனால் எக்காலத்திலும் இப்படிப் போடு என்று கட்டளையிடும் முதலாளி இல்லை! 
தாங்களாகவே சசிகலா நட்பு வட்டம் நாடி, ஆதரவு நிலை எடுத்து, முதல் பக்கத்தில் இருந்து செய்தியைப் பிரதானப் படுத்தி... எல்லாம் இந்த உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. 

வெகுஜன இயக்கத்தில் இருந்து தனித்துப் போகும் உங்கள் திபிக., இயக்கம்... பெரும் பின்னடைவைச் சந்திக்காமல் இருக்க வேண்டுமே என்றும், இதழை நம்பியுள்ள பலரின் வாழ்க்கை கெட்டுப் போய்விடக் கூடாதென்ற கவலையினாலும் இவ்வளவு நேரத்தை செலவிட்டு இதை பதிவு செய்ய வேண்டியுள்ளது. 

ஆசிரியரே! நாங்கள் எதிர்பார்த்தது தினமணி ஆசிரியராக, தன் பெருமையைக் காக்கும் ஒருவராக தாங்கள் இருப்பதைத்தானே ஒழிய, அதிமுக., கட்சிப் பத்திரிகையின் ஆசிரியராக அல்ல! ஆகவே ஆசிரியரே நீங்கள் நீங்களாக இருக்க வேண்டாம். தினமணி ஆசிரியராக இருங்கள்! 

இப்படிக்கு, 
தினமணியின் நலன் நாடும்
உங்கள் முன்னாள் நண்பன்.


Best Regards,

Senkottai Sriram

(Journalist / Writer)

திங்கள், நவம்பர் 14, 2016

பாசம் எனும் கட்டு; முன்னேற்றத்தைத் தடுக்கிறதோ?


வீரகேரளம்புதூரில் கோயில்கொண்ட நவநீதகிருஷ்ண ஸ்வாமியின் பெயரை, எங்கள் குடும்பத்தில் உள்ள ஆண்கள் சிலருக்கு வைத்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவராக இருந்தவர் என் அத்தை மகன் நவநீதகிருஷ்ணன். நவநீதன், நவனீ என்றெல்லாம் செல்லமாய் அழைக்கப்பட்டவர்!

என் துவக்கப் பள்ளிப் பருவத்தில் பார்த்ததுண்டு. மிகவும் அமைதியானவர். யாரிடமும் அதிர்ந்து பேச மாட்டார். மனத்தில் ஓர் அழுத்தமும் அமைதியும் குடிகொண்டிருக்கும். முகம் சலனமற்று எந்தவித கோபத்தையோ வருத்தத்தையோ நகைப்பையோ வெளிப்படுத்தாமல் அப்படியே இருக்கும்!

மிகச் சிறு வயதில் ராணுவத்தில் பணியில் சேர்ந்தாராம். பத்து வருடத்துக்கும் மேல் சர்வீஸ் முடித்து 30 வயதுகளில் ஊர் திரும்பிவிட்டார். தென்காசி மேலப்புலியூர் அக்ரஹாரத்தில், அவரது வீட்டின் மாடியில் போய் அமர்ந்தாரென்றால் புத்தகமும் கையுமாக இருப்பார். ராணுவத்தில் இருந்த சகவாசம், மிலிட்டரி சரக்குக்கு ஆட்பட்டு விட்டாராம்! அதனால் அவர் அருகே போக அச்சப்பட்டு ஒதுங்கிச் சென்றிருக்கிறேன்! வயது பத்தைக் கடந்திராத அந்தப் பருவத்தில் சாராயத்தின் வீரியம் எல்லாம் என் அறிவுக்குள் எட்டியதில்லை! ஆகவே எட்ட நின்றே பார்த்திருந்தேன்! ஆனாலும் ராணுவ சேவை என்பது அவர் மூலம் சிறுவயதில் தீப்பொறியாய் ஒரு மூலையில் பற்றியது!

அடுத்த ஓரிரு வருடங்களில் அவருக்குத் திருமணம் ஆயிற்று! அதற்கு அடுத்த ஓரிரு வருடங்களில் மண வாழ்க்கை நிலைக்காமல் மரித்தும் போனார்! இருந்தாலும், ராணுவத்தில் இருந்து திரும்பியவர் என்ற அந்த அடையாளம் மட்டும் மனசுக்குள் ஒட்டிக் கொண்டதில், நாமும் ராணுவப் பணிக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் துளிர்விட்டிருந்தது!

தென்காசியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்த நேரம்... ஆறடி உயரம். கூடைப்பந்து, வாலிபால், கால்பந்து, கிரிக்கெட் என விளையாட்டுகளில் ஆர்வமுடன் பங்கேற்று போட்டிகளுக்கும் சென்று வந்தேன். குழு விளையாட்டுகள்தான்! அப்போதுதான், NDA - National Defence Academy தேர்வு எழுதலாம் என்று உடன் படித்த நண்பர்கள் ஓரிருவர் முயன்றனர். என்னவென்றே அம்மாவிடம் சொல்லாமல் அந்தப் பதினாறு வயதில் நானும் எழுதினேன்.

எழுத்துத் தேர்வு முடிந்து, அடுத்த கட்டத்தில் வந்து நின்றது. மெள்ள அம்மாவிடம் ஆசையைச் சொன்னேன்! டிஃபன்ஸ் என்ற சொல், அம்மாவுக்கு அதிர்ச்சியைத் தந்தது. ஏற்கெனவே மதிப்பும் பாசமும் வைத்திருந்த என் அத்தான் நவநீயின் வாழ்க்கை ஏற்படுத்திய பாதிப்பு ஒரு புறமும், ஒற்றைப் பிள்ளை, அதுவும் தலைப்பிள்ளை எப்படி உன்னை விட்டு இருப்போம் என்ற பாசக் கட்டு மறுபுறமுமாக இழுத்துக் கட்டியதில், அந்த முயற்சி அத்துடன் நின்று போனது! பனிரெண்டாம் வகுப்பு முடிந்த கையுடன் என் பெரிய மாமா சுந்தர்ராஜனின் கையில் என்னை ஒப்படைத்தார்! நானும் திருச்சிக்கு வந்தேன்; கல்லூரிப் படிப்புக்கு!

இப்போது யோசித்துப் பார்க்கிறேன். அந்தப் பதினாறு வயதில் ராணுவப் பணிக்கு சென்றிருந்தால், இருபது வருட சேவை முடிந்து இன்று திரும்பியிருக்கலாம்! இந்த இருபதுக்கும் மேலான வருடங்களிலும்  தாயை விட்டுப் பிரிந்து தனியாகத்தான் வாழ்ந்திருக்கிறேன், என்றாலும் கூப்பிடு தொலைவில் இருந்து கொண்டு! ஆசையிருந்தும் ராணுவப் பணிக்குச் செல்லாமல் இருந்த இந்த இருபது வருடங்களில் அப்படி ஒன்றும் பெரிய சாதனையோ, சமூகத்துக்குப் பயனுள்ள வாழ்க்கையையோ நான் வாழ்ந்துவிடவில்லைதான்!

அத்தானின் கதியை நினைத்துதான், சிகரெட், மது இரண்டின் அருகேயும் செல்லக் கூடாதென சத்தியம் செய் என்றார் அம்மா. இன்று வரை அந்த சத்தியத்தைக் கடைப்பிடிக்கிறேன்! ஆனாலும், பாசம் என்ற கயிறு, எப்படி நம் தனிப்பட்ட விருப்பங்களில் இழுத்துச் செல்லாமல் கட்டிப் போட்டு முடக்கிவிடுகிறது என்பதை அவ்வப்போது யோசித்துப் பார்க்கிறேன்.

கல்லூரியில் படித்த 90களில்தான் கணினிப் படிப்பு அறிமுகமானது. யுனிக்ஸ், சி ப்ளஸ், டிபேஸ், என முயன்று படித்தும், உடன் படித்த நண்பர்கள் அத்துறையில் சென்றபோதும்,  வழிகாட்ட யாருமின்றி அந்தத்  துறையிலும் கால் பதிக்காமல் ஏதோ மார்கெடிங் என்று துவக்கத்தில் ஊர் சுற்றி, பின்னாளில் பத்திரிகைத் துறை என்று தடம் மாறிப் போனது!

இந்த ஞாயிறுப் போதில், குடியிருப்பின் அடுத்த ப்ளாக் நண்பர் திரு. ஜகந்நாதனிடம் பேசிக் கொண்டிருந்தபோது, 28 வயதாகும் அவர் மகன் இன்ஃபோஸிஸ் பணியில் மெல்பர்னில் இருப்பதாகவும், இந்தக் காலத்துப் பசங்களெல்லாம் படிக்கும் போதே கேரியர் குரோத், வளர்ச்சி, போட்டிகள் நிறைந்த உலகம் எப்படி சமாளிப்பது என்பதில் கவனம் செலுத்துகின்றனர் என்றும், பாசம் என்றெல்லாம் பார்த்துக் கொண்டு தயங்கி நிற்பதில்லை என்றும் கருத்தைச் சொன்னார். சாப்பிட்டாயா என்று கேட்டால் கூட, அதற்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்கும் மனநிலையில் அவர்கள் இல்லை என்றும், தங்களை இன்னும் குழந்தை போல் யோசிக்கிறார்களே என்று நினைத்துக் கொள்வதாகவும் கூறினார்.

தலைமுறைகள் குறித்த அவரின் இந்தச் சிந்தனையே, என்னைப் பற்றிய சுயபரிசோதனைக்கு என்னைத் தூண்டியது! படிப்பும் திறமையும் இருந்தது; ஆனால் வழிகாட்டிகள் எவரும் இல்லை! சொந்தங்களும் சொல்லிக் கொள்ளும்படி வழிகாட்டும் நல்ல நிலையிலில்லை! காற்றின் திசையில் அலைக்கழிக்கப்படும் படகைப் போல் பயணித்தாயிற்று! துடுப்பு போடும் வலிமையின்றி! அதுதான்... நான் ஏன் இப்படி உதவாக்கரை ஆனேன் என்று இப்போதும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்...! சுய சிந்தனை! சுய பரிசோதனை! 

ஞாயிறு, ஜூன் 05, 2016

புனித தாமஸ் எனும் புனை கதை!

புனித தாமஸ் எனும் புனை கதை!
***
தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் அலுவலகத்தில் பணி புரிந்து கொண்டிருந்தபோது...
பல மணி நேரம் பணி செய்வதால் பணியாளர்க்கு ஏற்படும் மன அழுத்தம் போக்க சிறப்புப் பயிற்சி என்று
ஒரு டாக்டர்... ஹாஹா ஹிஹி ஊஹு ஹெஹே ஹைஹைன்னு ஏதோ சிரிப்பு, கைதட்டல், டான்ஸ், எக்சர்சைஸ் என்று என்னமோ கூத்தடித்து ஒரு நாள் முழுக்க வீணாக்கினார்...
சென்னையைப் பற்றி சொன்னார்...
சுற்றுலா இடங்கள் என்று ஏதேதோ பேசினார்
எல்லாம் சகித்துக் கேட்டுக் கொண்டிருந்தேன்...
திடீரென செண்ட் தாமஸ் சர்ச் என்றார்... மந்தைவெளி சர்ச்..
பிருங்கிமலை சர்ச் பற்றி சொன்னார்...
ரொம்ப உருக்கமாக யாரோ ஒரு பிராமணன் தாமஸை குத்தி  தோமயர் மலையில் சாவடிச்சார் என்று கதை விட்டார்...(இந்த பிருங்கி மலை பரங்கிமலையான கதையை  ஏற்கெனவே பகிர்ந்துகொண்டிருக்கிறேன்...)
என் சகிப்புத் தன்மை என்னிடம் சகிக்காமல் ஓடியது...
எழுந்து நின்று கொஞ்சம் ஆக்ரோஷமாகவே பேசினேன்...
நீங்க சொல்றதுக்கு என்ன ஆதாரம்? என்று!
வழிவழியாக சொல்லப்படும் கதை, அங்கே அப்படித்தான் எழுதிப்  போட்டுள்ளார்கள் என்றார்.
அப்படியானால்... தாமஸ் எந்த வழியில் இந்தியாவுக்கு வந்தார்  என்றேன்...
கடல் வழிஎன்றுதான் சொல்கிறார்கள் என்றார்.
அப்படியானால் வாஸ்கோடகாமாவை இந்திய வரலாற்றின் பக்கங்களில் இருந்து கிழித்து எறிந்துவிட வேண்டும் சம்மதமா என்றேன்...
அர்த்தம் புரிந்தவர் போல் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து விட்டார்...
மயிலையில் இருந்து கொண்டு, சர்ச்சாகிவிட்ட அந்தக் கபாலியின் கோயிலுக்கு எத்தனை முறை சென்றிருக்கிறேன். தூண்களும் படிகளும் இன்றும் பறை சாற்றுகின்றது.  (https://goo.gl/uWRpdV)
பாடப்பட்ட பாடல்களெலாம்... கடற்கரையில் அமர்ந்த ஈசனின் திருக்கோவில் தாள் தொட்டு சாகரத்தில் சங்கமித்த அலைகளைப் பேசுகின்றன...
சம்பந்தரின் சம்பந்தம் பெற்ற இந்தப் பாடல் அதைச் சொல்லும்...
*
ஊர்திரை வேலை உலாவும் உயர் மயிலைக்
கூர்தரு வேல் வல்லார் கொற்றங் கொள் சேரிதனில்
கார்தரு சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஆர்திரை நாள் காணாதே போதியோ பூம்பாவாய்.
கடலின் அலைகளானது ஊரில் உலாவரும் உயர்ந்த மயிலையில், கூரிய வேல்வல்லவர்களால் காவல் காக்கப்பட்ட பகுதியில், கரிய சோலைகள் சூழ்ந்த திருக்கபாலீச்சரத்து அமர்ந்த பிரானின் ஆதிரைத் திருநாள் காணாது, பூம்பாவையே, போவாயோ!
1. திருவாதிரைத் திருநாளும் புராணங்களிலும் சங்க இலக்கியங்களிலும் போற்றப்படும் விரதமாகும். இறைவன் ஆடல் வல்லானாகக் காட்சி அளித்த கருணை கருதி ஆதிரையன் எனத் திருமுறைகள் பலவிடத்தும் விளிக்கும்.அட்ட மாவிரதங்களில் ஒன்றான திருவாதிரைச் சிறப்பு
2. ஊர் திரை வேலை உலாவும் உயர் மயிலை -திருமயிலாப்பூர்க் கபாலீச்சரம், திருஞானசம்பந்தப் பெருமான் காலத்தில் கடற்கரையிலேயே இருந்தது. (மாசிக் கடலாட்டுக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான் – சம்பந்தர்)
3. திரை – அலை; வேலை – கடல்; கொற்றம் – காவல்;சேரி – இருப்பிடம்; கார் – கருமை.

***
பொய்கள் .. மதசார்பின்மை என்ற நிலைப்பாட்டில் பலராலும் பரப்பப்  படுவது இது ஒன்றும் புதிதல்ல!
இந்திய வரலாற்றின் பக்கங்களில்
ரத்தம் தோய்ந்த வரலாறு - துருக்கியர் படையெடுப்புகளும் அதன் மதப் பரவலாக்கமும்!
இந்திய வரலாற்றின் பக்கங்களில்
ரத்தம் தோய்ந்த வரலாறு - ஐரோபியப் படையெடுப்புகளும் கிறிஸ்துவ மத பரவலாக்கமும்!

வாள் என்று முன்னே நீட்டி, கழுத்தில் கத்தியை வைத்து கதறக் கதறக் கொலைகளைச் செய்த அரேபியராகட்டும்...
ரொட்டித் துண்டை முன்னே நீட்டி கதறக் கதறப் பார்த்திருந்து இயேசுவின் நாமத்தால் நாக்கைச் சப்புக் கொட்ட வைத்த பாதிரிகளாகட்டும்...
எல்லாரும் இந்த இந்தியத்  திருநாட்டின் வரலாற்றின் பக்கங்களில் அழுத்தமாகப் பதியப் பட்டிருக்கிறார்கள்!
அந்த உண்மை வரலாறுகளை தேடிப் படிக்காதது நம் குற்றம்!
***
கோவா இன்க்யுசிஷன் - கோவா நீதி விசாரணை  என்பதை கூகுளில் தேடிப் பிடித்துப் படியுங்கள்!
கோவா என்ற அந்த இந்தியப் பிரதேசம் - எப்படி  ’அளவு கடந்த அன்பெனும் மகிமை’யால் கிறிஸ்துவமயமானது என்பதை படித்துப் பாருங்கள்!
***
இந்திய மன்னர்களும் சண்டையிட்டார்கள்!
சேரனும் சோழனும் பாண்டியனும்கூட சண்டையிட்டான்.
வாள்களும் ஈட்டிகளும் மோதிக் கொண்டன...
சமணமும் புத்தமும் கூட போட்டியிட்டது
சைவமும் வைணவமும் கூட சண்டையில் ஈடுபட்டன
மதங்களைக் கட்டிக் கொண்ட மன்னர்களால் மதப்  பிடிப்புள்ள தத்துவவாதிகள் கொலையுண்டார்கள்...
ஆனால்... மக்கள் மடியவில்லை! கத்தி முனையில் கழுத்தில் கீறப்படவில்லை! மதத்தை முன்னிறுத்தி போர்கள் நிகழவில்லை!
மண்ணாசையே போருக்குக் காரணமானது!
வரலாற்றில் தன்னை முன்னிறுத்தும் பேராசையே வாள்சண்டைக்கு காரணமானது!
வெற்றி பெற்றாலும், வென்ற மண்ணில் மக்களை சமாதானப் படுத்த வெற்றிபெற்றவன் செய்த முதற்காரியம், அந்த மக்களின் மத உணர்வைப் போற்றும் விதமாய் அவர்களின் தெய்வத்துக்கு கோயில்களை எழுப்பியதுதான்! காரணம் அதே தெய்வம் இவனுக்கும் தெய்வமாக இருந்ததே!
ஆனால்....
இந்திய மதங்களை அழிக்கக் கிளம்பிய அன்பு, அகிம்சை பேர் தாங்கிய மதங்களெலாம்
இந்த மண்ணுக்குச் செய்த துரோகங்கள்... கொஞ்ச நஞ்சமல்ல! கொடிய நஞ்சு!
***
இன்றளவும் மாரியம்மனையும் சுடலையப்பனையும் மாடசாமியையும் இன்னும் வெளி உலகை வந்தடையா எண்ணற்ற தெய்வங்களையும் கும்பிட்டுக் கொண்டிருக்கும் அந்த மக்களைக் காணும்போதெல்லாம்....
எத்தகைய வீரம் விளைந்தவர்கள் என்பதை எண்ணி எண்ணி உள்ளம் சிலிர்க்கும்!
ஆமாம்..
இன்றும் தங்கள் குல வழக்கப்படி, மரபு சார்ந்து, விழா எடுத்து, பொங்கலிட்டு, படையலிட்டு, தங்கள் தெய்வங்களைத் தொழுது கொண்டிருக்கும் ஒவ்வொருவருமே...
வீர நெஞ்சினரே...
விலை போனவர்களைப் போலும், வாளுக்கு அஞ்சி வாய் மூடிய கோழைகளைப் போலும் இல்லாது நெஞ்சு  நிமிர்த்தி நிற்கின்றார்களே... அதற்காகவே அவர்கள் காலில் விழுந்து வணங்கலாம்! வணங்குகிறேன்!

****
மேலும் படிக்க... சில சுட்டிகள்!
* ஜெயமோஹன் கட்டுரை http://www.jeyamohan.in/600#.V1OdUPl97IU
* டோண்டு வலைப்பதிவு: http://dondu.blogspot.in/2008/08/blog-post_12.html
கோவா நீதிவிசாரணைச் சம்பவங்கள்:
* https://en.wikipedia.org/wiki/Goa_Inquisition
* http://www.newindianexpress.com/education/student/Goa-Inquisition/2015/09/03/article2979630.ece
* https://goo.gl/3VUfFk

புதன், மார்ச் 02, 2016

இதழியல் அறம் குறித்த நீதிபதியின் பார்வை


ஒன் வே, நோ எண்ட்ரி, நோ ஃப்ரீ லெப்ட், சிக்னலை மதிக்காமல் கடப்பது... இவற்றில் எல்லாம் பார்த்தீர்கள் என்றால், தவறு செய்பவர்களை தகுந்த நேரத்தில் பிடித்து அபராதம் விதிப்பது என்பதை விட,
தவறு செய்யத் தூண்டி, வண்டியோட்டியின் கண்ணில் படாதவாறு இடது புறம் மரத்துக்குப் பின்னோ, தெருவிளக்கு மின் பெட்டிக்குப் பின்னோ மறைந்து நின்று... திடீரென இடப்புறம் திரும்பி வருபவரை கப் என்று பிடித்து, கறந்து விடுவது... போக்குவரத்து போலீஸாரின் இயல்பு. அவர்கள் என்றுமே, தவறு செய்யாமல் தடுக்கும் வகையில், வாகன ஓட்டிகளின் கண்ணில் படும் வகையில் நிற்பதில்லை!
இது கிட்டத்தட்ட ஸ்டிங் ஆபரேஷன் போல்தான்! அதாவது பொறி வைத்துப் பிடிப்பது.
ஏற்கெனவே சபல புத்தியுள்ள ஒருவனை, விதி மீற வைத்து, அபராதம் கறக்கும் ஒரு செயலைச் செய்வது அறமா?
இது போன்றதற்கான விடையை, ஊடகங்களின் ஸ்டிங் ஆபரேஷனை வைத்து  நீதிபதி ராமசுப்ரமணியன் சொன்னது ரசிக்கும் படி இருந்தது. நல்ல தகவலாகவும் இருந்தது.
எங்கே என்று கேட்கிறீர்களா?
***
தினமணி அறக்கட்டளையின் சார்பில், மார்ச் 1 ஆம் நாள், ஏ.என்.எஸ்., நினைவுச் சொற்பொழிவு என்றும், முதல் சொற்பொழிவாக நீதிபதி ராமசுப்ரமணியன் சிறப்புச் சொற்பொழிவு என்றும் பார்த்தேன். தலைப்பு இன்னும் தூண்டுதலாக அமைந்துவிட்டது. "இதழியல் அறம்” என்பதுதான் அது.
நீதிபதி ராமசுப்ரமணியன் மீது பெரும் மரியாதை மட்டுமல்ல, எதிர்பார்ப்பும் உண்டு எனக்கு! நேரில் சந்தித்து அளவளாவிய தன்மையால் மட்டுமல்ல... எவர் ஒருவர் பசுவை வைத்து பூஜை செய்து நியமப்படி நடந்து கொள்கிறாரோ... அவர்  காமதேனுவின் அம்சம் ஆகிறார்!
நீதிபதி ராமசுப்ரமணியன் தமது இல்லத்தில் இப்போதும் பசு மாடு வைத்து, கோ பூஜை முறையாகச் செய்து, தர்ம நெறிப்படி வாழ்வை நகர்த்திச் செல்பவர். அந்த நம்பிக்கை எனக்கு உண்டு! மேலும், நல்ல பேச்சுத் தமிழ் நடை கைவரப் பெற்றவர். கெக்கே பிக்கே நகைச்சுவை என மலிவான சரக்கை வலுக்கட்டாயமாகத் திணிக்காமல், இயல்பான கௌரவமான நகைச்சுவையைக் கையாளக் கூடியவர். அந்த எண்ணத்தில் ஏ.என்.எஸ்ஸுக்காகவும், தினமணிக்காகவும், நீதிபதியாருக்காகவும் இந்த நிகழ்ச்சிக்கு தனிப்பட்ட அழைப்பிதழ் வராவிட்டாலும், தினமணியின் பொது அழைப்பு காரணத்தால், தினமணி வாசகனாகவே இந்த நிகழ்ச்சிக்குச் சென்றேன்!
***
நிகழ்ச்சியில் பேசிய அனைவரின் பேச்சுமான, ஓரளவு முழுமையான ரிப்போர்ட்... தினமணியில் 2ம் பக்கம் முழுமைக்கும் பிரசுரமாகியிருக்கிறது. பார்த்துப் படித்துக் கொள்க!
நீதிபதியார் பேசியவை வழக்கம்போல் ரசிக்கத் தக்கனவாய் அமைந்திருந்தது.
அவர் பேசியவற்றில் ஒரு கருத்து...
***
அறம் விலகக் காரணம்..?
இதழ்களின் எண்ணிக்கை பெருகியது; (இதழ்கள் பெருகிய அளவுக்கு வாசகர்கள் பெருகாதது); இதழ்களுக்கு இடையேயான போட்டி மனப்பான்மை! முந்தித் தருதலில் குளறுபடி; கிடைத்தது மலினமாக இருந்தாலும் காசுக்காக செய்தியாக்குவது! தவிர்க்க இயலாத போட்டியால் பொறிவைத்தல் செய்திச் செயல்களில் ஈடுபடுவது....
- இப்படி சில காரணங்கள் முன்வைக்கப்பட்டது.
அடுத்தது... அவரின் உரைத் தொகுப்பில் கடைசியாக இடம்பெற்ற முத்தாய்ப்பு வார்த்தைகள்!

ஓர் இதழ், அறத்தில் பால் நிற்கிறதா அல்லது அப்பால் தள்ளிப் போகிறதா என்பதை, அந்த இதழ் வெளியிடும் செய்திகள், அதில் இடம்பெறும் கட்டுரைகளின் உண்மைத் தன்மை, பொதுநலன் மட்டுமே அதில் பொதிந்துள்ளதா அல்லது தங்களுடைய சுழற்சி (சர்குலேஷன்), மலிவான பரபரப்பு விற்பனையை மையமாகக் கொண்டுள்ளதா என்ற தன்மை, (சுயவிளம்பரம், சுயதம்பட்டம் கொண்டு விளங்கும் தன்மை) இவற்றுக்கான விடையில்தான் இதழியல் அறத்தின் உயிர் நாடி உள்ளது.
***
இப்படியாக,
இந்த உயிர்நாடியை உயர் நாடித் துடிப்பாய்க் கொண்டு செயல்பட்டதால்தான், ஏ.என்.எஸ் என்ற ஒரு சித்தாந்தத்தை இன்றளவும் நாம் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். இது தலைமுறை கடந்த உயர் தனிச் சிந்தனை!

இருக்கும்போது, ஜால்ரா போட்டு, அண்ணன் வாழ்க, ஐயா வாழ்க கோஷம் போடுவதெல்லாம் அவ்வப்போதைக்கு காதுக்கு குளிராகவும் மனதுக்கு போதையாகவும் இருக்கும்... ஆனால் காலம் கடந்து நிற்பதுதான் பிறப்பின் பயன்.
அந்தப் பிறவிப் பயனை அடைந்த ஏ.என்.எஸ் போன்றவர்கள், நமக்கு வழிகாட்டிகளாய் அமையட்டும்!
 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix